இந்தியா

Asaram Bapu : பாலியல் குற்றச்சாட்டில் கைதான சாமியார் ஆசாராம் பாபுவுக்கு 7 நாள் பரோல்...

By leninakathiya
30 Aug 2024, 03:10 PM
Asaram Bapu : பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபுவுக்கு 7 நாட்கள் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Asaram Bapu : உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, தனது ஜோத்பூர் ஆசிரமத்தில் பலாத்காரம் செய்ததாகப் பிரபல சாமியார் ஆசராம் பாபு 2013ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இதனிடையே, சூரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 2001 முதல் 2006 வரை தான் இருந்த நேரத்தில் சாமியார் ஆசாராம் பாபு தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சூரத்தைச் சேர்ந்த பெண், அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா போலீசில் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கிலும் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதற்கிடையில், தனது உடல்நிலையை காரணம் காட்டி தன் மீதான கற்பழிப்பு வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ஆசாராம் பாபுவின் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், உடல்நிலை காரணமாக ஆசாராம் பாபுவுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஏழு நாள் பரோல் வழங்கியது. அவர் மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆசாராமுக்கு பரோல் வழங்கும் போது, ​​ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அவருடன் நான்கு போலீசார் பயணிக்க வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்தது. மேலும், அவருடன் இரண்டு உதவியாளர்கள் இருக்கவும் அனுமதிக்கப்பட்டார்.

ஆசாராம் சிகிச்சை பெறும் தனியறை 24 மணி நேரமும் போலீஸ் கண்காணிப்பில் உள்ளது. பரோலுக்காக ஆசாராம் தரப்பில் தனிப்பட்ட முறையில் ரூ.50,000 மதிப்பிலான பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அவரது சிகிச்சை மற்றும் பயணச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.