இந்தியா

நீட் தேர்வு விவகாரம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு!

By Christon
22 Jul 2026, 11:14 AM
நீட் விவகாரம் குறித்து விவகாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கருப்பு உடையணிந்து நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் இல்லத்தின் முன்பாக தர்னாவில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நேற்றிரவு விடுவிக்கப்பட்டனர்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் தொடர்ச்சியாக, இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் கருப்பு உடையணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், தொடர்ந்து அவைக்குள்ளும் நீட் விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தத் தொடர் அமளி மற்றும் கூச்சல் குழப்பம் காரணமாக, மக்களவை நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.