மத்தியப் பிரதேச மாநிலம் தேவால் பகுதியில், கூட்டுத் திருமண நிகழ்ச்சி என்ற பெயரில் 42 குடும்பங்களை ஏமாற்றி ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, தங்களுக்குத் தகுந்த வரன் அமையாமல் தவித்து வந்த 42 இளைஞர்களின் குடும்பங்களை ஒரு மோசடி கும்பல் குறிவைத்துள்ளது. இந்தூரில் உள்ள ஒரு காப்பகத்தில் இருக்கும் பெண்களைத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, சமூக வலைதளங்களில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்ட பெண்களின் புகைப்படங்களை காட்டி நம்ப வைத்துள்ளனர். இதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரிடமிருந்தும் ரூ.12,000 முதல் ரூ.25,000 வரை வசூலித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ரூ.10 லட்சத்திற்கும் மேல் பணம் வசூலிக்கப்பட்ட நிலையில், மே 25 அன்று தேவாஸ் என்ற பகுதியில் உள்ள ராகாகஞ்ச் கிளப் மைதானத்தில் கூட்டுத் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏமாற்றப்பட்ட குடும்பங்கள்
திருமணத்திற்காக மே 24-ஆம் தேதியே மாப்பிள்ளைகளும் அவர்களது உறவினர்களும் மைதானத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆனால், அங்கு திருமணத்திற்கான எந்தவொரு ஏற்பாடுகளோ அல்லது மணமேடையோ அமைக்கப்படவில்லை. அங்கு இருந்த விழா ஏற்பாட்டாளர்களான முகேஷ் பைராகி மற்றும் அவரது மனைவி சுனிதா ஆகியோர், மணமகள்கள் இந்தூரிலிருந்து வந்து கொண்டிருப்பதாகக் கூறி நள்ளிரவு வரை நாடகமாடியுள்ளனர். இரவு 10 மணி அளவில் மணமகள்கள் யாரும் வரப்போவதில்லை என்பதும், தாங்கள் ஏமாற்றப்பட்டதும் மணமகன் வீட்டாருக்குத் தெரியவந்தது.
போலீஸ் விசாரணை மற்றும் கைது
பாதிக்கப்பட்ட அபிஷேக் என்ற வாலிபர் அளித்த புகாரின் பேரில் தேவாஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். முக்கியக் குற்றவாளிகளான முகேஷ் பைராகி மற்றும் அவரது மனைவி சுனிதாவை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சதியில் தொடர்புடைய இவர்களது உறவினர்களான தினேஷ் தாஸ் பைராகி மற்றும் நரசிங் தாஸ் பைராகி ஆகிய இருவரைத் தேடி தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.