முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று (ஜூலை 3) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினர்.
சுமார் ஆறு மணி நேர விசாரணைக்குப் பிறகு, நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்காக காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றனர். ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நீதிமன்றங்களுக்கு விடுமுறை இருப்பதால், காவல்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தும் நோக்கில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய காவல்துறை மூலம் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) அழுத்தம் கொடுத்து வருவதாக அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், “எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருவதாகக் கூறி மிரட்டுகின்றனர். நான் இன்றும் என்றும் திமுகவில்தான் இருப்பேன்” என்று முழக்கமிட்டபடியே அவர் காவல்துறையினருடன் சென்றார்.