சினிமா

விஜய் மகன் படத்துக்கு சிக்கல்? சஞ்சய்யின் இயக்குநர் கனவு பலிக்குமா? அரசியல் அழுத்தம் காரணமா..?

By VASUKI
22 Feb 2025, 04:12 PM
விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு, அரசியல் அழுத்தம் காரணமாக அடுத்தடுத்து பிரச்சினைகள் எழுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் விஜய், தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறி வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், இனி சினிமாவில் நடிப்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளார். தற்போது நடித்து வரும் ஜனநாயகன் தான் விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. விஜய் சினிமாவில் இருந்து விலகும் நேரம், அவரது மகன் சஞ்சய் சினிமாவில் என்ட்ரி ஆகிவிட்டார். தந்தையை போல ஹீரோவாக இல்லாமல், என் வழி டைரக்ஷன் தான் என சஞ்சய் எடுத்துள்ள முடிவு, ரசிகர்களுக்கே ஷாக்கிங்காக அமைந்தது. 

அதுவும் சஞ்சய்யின் முதல் படத்தை லைகா தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாக, கோலிவுட்டே சர்ப்ரைஸ் ஆனது. இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியான பின்னர், அடுத்தக்கட்ட அப்டேட் வருவதில் ரொம்பவே தாமதம் ஆனது. இதனிடையே லைகா தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறாமல் போனதால், சஞ்சய்யின் படத்தை தொடங்குவதில் ஃபைனான்ஸ் பிரச்சினை இருப்பதாக சொல்லப்பட்டது. இதையெல்லாம் கடந்து சஞ்சய் படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் என்றும், தமன் இசையமைப்பதாகவும் அபிஸியல் அப்டேட் வெளியானது.

இப்படி பல சோதனைகளை கடந்து இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், தற்போது அதிலும் சிக்கல் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது விஜய் தற்போது தவெக தலைவராக அடுத்தடுத்து பல அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசை எதிர்த்தும், தமிழ்நாட்டில் திமுக அரசை கண்டித்தும் காட்டமாக தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால், சஞ்சய் இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், ஒருசில அரசியல் கட்சியை சேர்ந்தவர்களால் பிரச்சினைகள் வருவதாக சொல்லப்படுகிறது. 

அதேபோல், படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி அடிமேல் அடி வாங்குவதால், சஞ்சய் படத்தை கைமாற்றிவிடவோ அல்லது ட்ராப் செய்யவோ லைகா நிறுவனம் பிளான் செய்து வருகிறதாம். விஜய்யின் அரசியல் பிரவேசம், அவரது மகன் சஞ்சய்யின் சினிமா பயணத்துக்கு பெரிய ஸ்பீடு பிரேக்கராக இருக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.