சினிமா

பாரதி ராஜாவின் நிறைவேறாத ஆசை.. என்ன தெரியுமா?

By Christon
10 Jun 2026, 02:53 PM
கோலிவுட்டின் பல உச்ச நட்சத்திரங்களை உருவாக்கிய பாரதிராஜாவுக்கு, தன் மகனைப் பெரிய கதாநாயகனாகப் பார்க்க முடியாத ஒரு தீராத மனக்குறை கடைசி வரை இருந்தது.
திரையுலகில் பல சாதனைகளைப் படைத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, இன்று காலை தனது 84-வது வயதில் காலமானார். கோலிவுட்டின் பல உச்ச நட்சத்திரங்களை உருவாக்கிய இவருக்கு, தன் மகனைப் பெரிய கதாநாயகனாகப் பார்க்க முடியாத ஒரு தீராத மனக்குறை கடைசி வரை இருந்தது.

திரையுலகிற்கு ஏராளமான நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்து தடம் பதிக்க வைத்த பாரதிராஜா, தனது மகன் மனோஜையும் ஒரு பெரிய கதாநாயகனாக்க விரும்பினார். இதற்காக, கடந்த 1999-ஆம் ஆண்டு ‘தாஜ்மஹால்’ என்ற திரைப்படத்தை இயக்கி, அதன் மூலம் மனோஜைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். வழக்கமான இரு கிராமங்களுக்கு இடையேயான பகையை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ‘திருப்பாச்சி அருவாள’ போன்ற பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டாலும், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

திரைப்படத் தோல்வியும் பின்னடைவும்

பாரதிராஜாவின் வழக்கமான மண் வாசனை இந்தப் படத்தில் இல்லாததும், புதுமுக நாயகி ரியா சென் கிராமத்துக் கதைக்களத்திற்குப் பொருந்தாததும் படத்தின் தோல்விக்குக் காரணமாகப் பார்க்கப்பட்டது. மேலும், ‘இயக்குநர் இமயத்தின் மகன்’ என்ற ஒட்டுமொத்தத் திரையுலகின் மிக அதிகப்படியான எதிர்பார்ப்பே மனோஜுக்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது. பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட சுதாகர் போன்ற சில நடிகர்களைப் போல, மனோஜாலும் பெரிய அளவில் பேசப்படும் நடிகராக வர முடியவில்லை. எனினும், மனோஜ் தொடர்ந்து உதவி இயக்குநராகவும், சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் பணியாற்றினார்.

மகனின் மறைவும் துயரமும்

தன் மகன் திரையில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்ற வருத்தம் பாரதிராஜாவை நீண்ட நாட்களாக வாட்டி வந்தது. இந்தச் சூழ்நிலையில், கடந்த ஆண்டு அவரது மகன் மனோஜ் மாரடைப்பு காரணமாகத் திடீரென காலமானார். மகனின் இந்தத் திடீர் மறைவு, முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாரதிராஜாவை மன ரீதியாகப் பெரிதும் உலுக்கியது. இந்த ஆராத துயரத்துடனேயே சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா இன்று இயற்கை எய்தினார். பலரைத் திரையுலகில் கோலோச்ச வைத்த மாபெரும் இயக்குநர், தன் மகனைப் பெரிய நடிகராக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே மறைந்தது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.