நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுத் திருவிழா இன்று (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. சாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் திரளும் இந்த ஆன்மிகத் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியைப் புனிதம் செய்து ஏற்றிவைத்தார். ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கியுள்ள இத்திருவிழா வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
திருவிழா நாட்களான ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 7 வரை, பேராலயத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் மற்றும் கொங்கனி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகளும் வழிபாடுகளும் நாள்தோறும் நடைபெறவுள்ளன.
திருவிழாவையொட்டித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நடைபயணமாகவும் வாகனங்கள் மூலமாகவும் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வேளாங்கண்ணி கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு, கடற்கரைப் பகுதியில் தடுப்புகள் மற்றும் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா தலைமையில் 3,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு அரசுப் பேருந்துகளும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.