நடிகர் விக்ரமின் வைரல் குரங்கு வீடியோ விவகாரம்: விக்ரமிற்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் வனத்துறையின் அடுத்த அதிரடி விசாரணையில் ஈரோட்டில் உள்ள பண்ணை ஒன்றில் வெளிவந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குரங்கு ஒன்றுடன் விளையாடும் வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், அரிய வகையைச் சேர்ந்த குரங்கை தனது மடியில் வைத்துக்கொண்டு விக்ரம் கொஞ்சுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. குரங்கு செய்யும் முகபாவனைகளைப் போலவே விக்ரமும் செய்து காட்டியிருந்தார்.
அந்த குரங்கை வீட்டில் வைத்து வளர்க்க அனுமதி உள்ளதா என்ற வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்கள் மத்தியில் சில முக்கியமான கேள்விகளும் விவாதமும் உருவானது. அதன்பின்னர்,விக்ரம் அந்த வீடியோ பதிவை தனது சமூகவலைதளப்பக்கத்தில் இருந்து நீக்கினார்.
விக்ரம் வெளியிட்ட வீடியோவில் இருந்த குரங்கு ‘லார் கிப்பான்’ (Lar Gibbon) இனத்தைச் சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. அழிவின் விளிம்பில் உள்ள அரிய விலங்கினங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த குரங்கு, சர்வதேச அளவில் பாதுகாப்பு தேவைப்படும் உயிரினமாக உள்ளது.
இந்த குரங்கு நடிகர் விக்ரமின் சம்பந்தியும், கெவின்கேர் நிறுவனத்தின் நிறுவனருமான சிகே ரங்கநாதனுக்கு சொந்தமானது என தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து சென்னை வனத்துறை அதிகாரிகள் சிகே ரங்கநாதனிடம் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அவரது வீட்டிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது லார் கிப்பான் குரங்கை வைத்திருப்பது தொடர்பான உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதிகள் குறித்து அதிகாரிகள் விசாரித்ததாக தெரிகிறது.
அதன் பின்னர், நடிகர் விக்ரமுக்கும் வனத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது, அதிகாரிகள் நேரில் சென்று நோட்டீஸை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்டது தொடர்பாக விக்ரம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், குரங்கின் உரிமை மற்றும் அதை வைத்திருப்பது தொடர்பான ஆவணங்கள் குறித்த விவரங்களை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறையின் அடுத்தகட்ட விசாரணை தற்போது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த லார் கிப்பனை விற்பனை செய்ததாக கூறப்படும் ஈரோட்டைச் சேர்ந்த வளர்ப்பாளர் கேசவநாதனின் பண்ணையில், வனத்துறை மற்றும் தமிழ்நாடு வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் (TNWCCB) நடத்திய சோதனையில் பல்வேறு வெளிநாட்டு விலங்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அந்த பண்ணையில் ஆப்பிரிக்க சர்வல் பூனைகள் இருப்பது ஆய்வின்போது தெரியவந்துள்ளது. இதில் 3 குட்டிகளும் அடங்கும். சர்வல் என்பது துணை சஹாரா ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் காட்டுப் பூனை இனமாகும். இந்த பூனைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன? யாரிடம் இருந்து பெறப்பட்டன? அவற்றுக்கான இறக்குமதி மற்றும் உரிமை ஆவணங்கள் உள்ளனவா? என்பது குறித்து வனத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
அதேபோல், பெண் லார் கிப்பன் ஒன்று உயிரிழந்தது குறித்த தகவலும் அதிகாரிகளிடம் முறையாக தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. வெளிநாட்டு விலங்குகள் தொடர்பான உயிரிழப்பு உள்ளிட்ட முக்கிய விவரங்களை அதிகாரிகளிடம் தெரிவிப்பது கட்டாயம். எனவே, அந்த கிப்பன் எவ்வாறு உயிரிழந்தது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், வனத்துறையிடம் கேசவநாதன் சமர்ப்பித்ததாக கூறப்படும் ஆவணங்களில், காட்டன்-டாப் டாமரின், ரெட்-ஹேண்டட் டாமரின், பிளாக்-டஃப்டட் மார்மோசெட் உள்ளிட்ட தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பல்வேறு குரங்கினங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், அமேசான் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட புளூ-ஃப்ரண்டட் அமேசான், ஆரஞ்ச்-விங்க்ட் அமேசான், ரெட்-லோர்டு அமேசான், சதர்ன் மீலி அமேசான், யெல்லோ-கிரவுன்ட் அமேசான் உள்ளிட்ட பல கிளி இனங்களும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட வன அலுவலர் கே.வி. அப்பலா நாயுடு கூறுகையில், "பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் விலங்குகளுக்கான பதிவு நடைமுறை முழுமையாக நிறைவடையவில்லை என்றும், அவற்றின் உரிமை மற்றும் கொள்முதல் தொடர்பான தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க உரிமையாளர் கேசவநாதனிடம் அறிவுறித்தியுள்ளோம்" எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சட்டவிரோதமாக வளர்க்கப்படும் வெளிநாட்டு விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டால் அவற்றை எங்கு வைத்து தனிமைப்படுத்தி பராமரிப்பது என்பதும் முக்கிய சவாலாக உள்ளது. இதற்கான போதிய உள்கட்டமைப்பை அரசு உருவாக்கினால், வெளிநாட்டு விலங்குகள் தொடர்பான சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ள முடியும் என பாதுகாப்பு குற்றவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் சமீபகாலமாக விக்ரமின் படங்கள் சரியாக செல்லாததால் இதுபோன்ற விடியோக்கள் மூலம் மக்களிடம் கவனம் பெற்று வைரலாகி வருவதாக நெட்டிசன்கள் சிலர் கமெண்டடித்து வருகின்றனர்.