சினிமா

விஜய் டயலாக்-ஐ பகிர்ந்து தந்தை சத்ய ராஜுக்கு பதிலடி கொடுத்த சிபிராஜ்!

By Christon
20 Apr 2026, 10:54 AM
விஜய் குறித்து நடிகர் சத்ய ராஜ் விமர்சித்த நிலையில், அவரது மகன் சிபிராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் களத்தில் நடிகர் சத்யராஜின் விமர்சனமும், அதற்கு அவரது மகன் சிபிராஜ் கொடுத்துள்ள மறைமுகப் பதிலடியும் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கித் தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜய்க்கு எதிராக, திமுக கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய சத்யராஜ், விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது பழைய 'தலைவா' படப் பிரச்சினையின்போது அவர் நடந்துகொண்ட விதம் குறித்துக் கடுமையாக விமர்சித்ததோடு, அதனை மேடையிலேயே கிண்டலாக நடித்துக் காட்டினார். இது விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஜய் பாணியில் சிபிராஜ் பதிவு

இந்நிலையில், சத்யராஜின் மகனும் நடிகருமான சிபிராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய்யின் தீவிர ரசிகரான சிபிராஜ், "உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்" என விஜய் ஒரு மேடையில் பேசிய புகழ்பெற்ற வரிகளைப் பதிவிட்டுள்ளார். தனது தந்தை விஜய்யை மேடையில் விமர்சித்த அதே நேரத்தில், சிபிராஜ் விஜய்யின் வரிகளைப் பகிர்ந்திருப்பது, தனது தந்தையின் விமர்சனங்களுக்கு அவர் அளித்த பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.