தமிழ்நாடு

விஜயின் முதல் வெளிநாட்டு பயணம்.. லண்டனுக்கு இப்படியா செல்வார்?

By Sumalekha
09 Sep 2026, 10:15 PM
சென்னையில் இருந்து எமிரேட்ஸ் EK 547 விமானத்தில் துபாய் செல்லும் விஜய், அங்கிருந்து லண்டனுக்கு தனது முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தைத் தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணம் நாளை தொடங்குகிறது. இதற்காக சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டன் செல்ல அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை டு துபாய் :

முதலமைச்சர் விஜய் நாளை இரவு சுமார் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK 547 பயணிகள் விமானத்தில் துபாய் புறப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமான பயணிகள் விமானத்தில் அவர் பயணிக்க இருப்பது இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

சென்னையில் இருந்து புறப்படும் இந்த விமானம் துபாயை சென்றடைந்த பிறகு, அங்கிருந்து லண்டன் நோக்கி முதலமைச்சர் தனது பயணத்தைத் தொடர உள்ளார்.

துபாயில் இருந்து லண்டன்.. முதல் வகுப்பில் பயணம்?

துபாயில் இருந்து லண்டன் செல்லும் பயணத்திற்கு எமிரேட்ஸ் நிறுவனத்தின் அதிநவீன விமானம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முதல் வகுப்பு பிரிவில் முதலமைச்சர் விஜய் பயணிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், சென்னையில் இருந்து துபாய் வரையிலான பயணம் ஒரு விமானத்திலும், அங்கிருந்து லண்டன் செல்லும் பயணம் மற்றொரு விமானத்திலும் நடைபெற உள்ளது.

முதலீட்டாளர்களை சந்திக்க திட்டம் :

லண்டன் பயணத்தின் போது பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் முதலீட்டாளர்களை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்கவும், முதலீடுகளை மேற்கொள்ளவும் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

முதலீட்டு ஒப்பந்தங்கள் மற்றும் தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகள் சிலர் ஏற்கனவே லண்டன் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கவனம் ஈர்க்கும் விஜயின் பயண முறை :

பொதுவாக முதலமைச்சர்களின் அரசுமுறை வெளிநாட்டுப் பயணங்களில் தனி விமானங்கள் பயன்படுத்தப்படும் நிலையில், விஜய் வழக்கமான பயணிகள் விமானத்தில் லண்டன் செல்வது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.

இந்தப் பயணத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகள் கிடைப்பதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.