தமிழ்நாடு

காதலனுக்குப் பைக் கிஃப்ட்.. தோழி வீட்டில் கைவரிசை காட்டிய கல்லூரி மாணவி!

By Christon
04 Sep 2026, 05:48 PM
பொள்ளாச்சி அருகே காதலனுக்குப் இருசக்கர வாகனம் வாங்கித் தருவதற்காக, தோழியின் வீட்டிலேயே நகை திருடிய கல்லூரி மாணவியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பி.காம் சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தனது தோழியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாருமில்லாத நேரத்தைப் பயன்படுத்தி, அங்கிருந்த பீரோவைத் திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.

நகை காணாமல் போனது குறித்துத் தமிழ்ச்செல்வன் என்பவர் அளித்த புகாரின் பேரில், பொள்ளாச்சி கிழக்குக் காவல் நிலையப் ஆய்வாளர்கள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த மாணவி நகைகளைத் திருடி பொள்ளாச்சியில் உள்ள நகைக் கடையில் ரூ.2,50,000-க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், தான் ஒருவரைக் காதலித்து வருவதாகவும், நகையை விற்ற பணத்தில் தனது காதலனுக்குப் புதிய இருசக்கர வாகனம் வாங்கித் தந்ததாகவும் அம்மாணவி காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவியைப் பொள்ளாச்சி ஜே.எம்-2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவரை கோவை பெண்கள் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, கைதான கல்லூரி மாணவி தனது காதலனுக்குப் புதிய இருசக்கர வாகனம் வாங்குவதற்காக வாகன விற்பனையகத்திற்கு (Showroom) நேரில் சென்று பைக் தேர்வு செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.