தொடர் விடுமுறைக்குப் பிறகு தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடும் நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உள்ளதால் பேரவையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
2026 - 27 பட்ஜெட் & மானியக் கோரிக்கைகள்
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிதியமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டையும், ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்தனர். அதில் 'வெற்றி மடிக் கணினி திட்டம்', 'வெற்றி வீடு திட்டம்', 'துளித் துளித் தண்ணீர் திட்டம்', 'வெற்றி வான்மகள் திட்டம்' உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து, துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான விவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சிகளின் கடுமையான குற்றச்சாட்டுகள்
கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "தவெக அரசு அமைந்த இந்தச் குறுகிய காலத்தில் தமிழகம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பல குற்றச் சம்பவங்களும், பாலியல் வன்கொடுமைகளும் நடந்துள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
அதேபோல், அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிப்படைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
"யாரும் எழுந்து ஓடிவிடக் கூடாது"
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் ஆகியோர் பேரவையில் காரசாரமாக விவாதித்தனர்.
அப்போது தலையிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவான விளக்கங்களை திங்கள்கிழமை (இன்று) அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், "நான் பதிலளிக்கும் போது எதிர்க்கட்சியினர் யாரும் எழுந்து ஓடிவிடக் கூடாது" என்றும் குறிப்பிட்டார். கடந்த முறை முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பேரவை நிகழ்வுகள்
ஜென்மாஷ்டமி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 3 நாட்கள் விடுமுறைக்குப் பின், இன்று காலை 9.30 மணிக்குச் சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. இன்று கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அரசினர் சட்டத் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்து முதலமைச்சர் விஜய் பேச உள்ளார். ஏற்கனவே 110 விதியின் கீழ் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து, சட்டப்பேரவை வளாகம், பால் கொள்முதல் விலை உயர்வு போன்ற முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ள நிலையில், இன்றைய பதிலுரையில் புதிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
முதலமைச்சரின் பதிலுரைக்குப் பிறகு சுற்றுச்சூழல், வனத்துறை, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெறவுள்ளன.