தமிழ்நாடு

பள்ளி கல்வி இணை இயக்குநர் பதவிக்கு கடும் கிராக்கி… கோடிக்கணக்கில் பேரம் பேசும் பெண் அதிகாரி..?

By Kalandhai
04 Jul 2024, 09:51 PM
பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் பதவிக்கு கோடிக் கணக்கில் பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் பணியிடங்கள் உள்ளன. அண்மையில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக இருந்த அறிவொளி பதவி ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் சிலரின் பணியிட மாறுதல்கள் நடைபெற்றன. இதன் காரணமாக இன்னும் சில தினங்களில் இணை இயக்குநர் பணியிட மாறுதல் வர இருப்பதாக தெரிகிறது. இதற்கு தற்போது அதிகாரிகள் மத்தியில் பெரும் போட்டி நிலவியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

குறிப்பாக இணை இயக்குநர் பணியாளர் தொகுதி பணி இடத்திற்கு போட்டி நிலவுகிறது. இந்த பதவியில் உள்ள இணை இயக்குநர் தான் பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் பணி இட மாறுதல்  வழங்க அதிகாரம் உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடங்கியுள்ளதால், பல ஆசிரியர்கள் தற்போது தங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து பணியிட மாறுதலுக்கு முயற்சிக்கக்கூடும். இந்த இணை இயக்குநர் பதவியை பிடிப்பதற்கு அதிகாரிகள் மத்தியில் போட்டி நிலவுகிறதாம். இந்தப் பணியிடத்தை பிடித்தால் பல லகரங்களையும் சில கோடிகளையும் பிடிக்கலாம் என்பது அதிகாரிகள் போடும் கணக்கு எனத் தெரிகிறது.

இதனிடையே இந்தப் பணியிடத்தை பிடிக்க, பெண் இணை இயக்குநர் ஒருவர் தற்போது ஒரு கோடி ரூபாயுடன் தயாராக இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவல்கள் வெளியானது முதல் அந்த துறைச் சார்ந்தவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இணை இயக்குநர் பதவிக்கு ஒரு கோடி வரை பேரம் பேசப்படுவது ஏன் எனவும் கேள்விகள் எழுந்துள்ளன. அப்படியானால் இதன் மூலம் அந்த குறிப்பிட்ட அதிகாரிக்கு எந்த அளவில் பலன் இருக்கும் என்பதும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.