அரசியல்

பிரதீப் ராஜ் கொலை:“பாதுகாப்பு கேட்டவருக்கே இந்த நிலைமையா?” உதயநிதி காட்டம்!

By Sumalekha
10 Sep 2026, 10:34 AM
சென்னையில் மீண்டும் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு சென்னையில் தொடர்ந்து குற்றச்சம்பவங்களும் கொலைகளும் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், திருவொற்றியூரில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக, அடையாறு வண்ணாந்துறை பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணன் என்பவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் தொடர்பான பரபரப்பு ஓய்வதற்குள், சென்னையில் மீண்டும் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் பதிவிட்டுள்ளதாவது, தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.


காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா? காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா,, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.

இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.