அரசியல்

தூய்மை பணியாளர்களின் 15 நாள் போராட்டம்... களத்தில் அமைச்சர்கள்!

By Sumalekha
04 Sep 2026, 01:08 PM
சென்னை ரிப்பன் மாளிகை வளாகம் முன்பு கடந்த 15 நாட்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தனர்.
சென்னை ரிப்பன் மாளிகை வளாகம் முன்பு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல்குமார் ஆகியோர் போராட்டக் களத்திற்கு சென்று தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்தனர்.

அமைச்சர் ஆனந்த் உறுதி :

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆனந்த், அவர்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொண்டு செயல்படும் என தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, “பல ஆண்டுகளாக தூய்மை பணியாளர்கள் தங்களது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். ஆனால் அவர்களின் குரல் முழுமையாக கேட்கப்படவில்லை. தற்போதைய அரசு மக்கள் நலனுக்காக செயல்படும் அரசாக இருக்கும்.

முந்தைய நிர்வாகங்களில் ஏற்பட்ட நிதி சிக்கல்களை சரிசெய்து, மக்கள் வரிப்பணம் முறையாக பயன்படுத்தப்பட்டு தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்களை நம்பிக்கையுடன் வரவேற்றுள்ள தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு உறுதியாக உள்ளது” என்று கூறினார்.

அமைச்சர் நிர்மல்குமார் :

தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

“இது உங்களுடைய அரசு. தூய்மை பணியாளர்களின் நலனுக்காக நடவடிக்கை எடுக்காமல் வேறு யாருக்காக அரசு செயல்படும்? உங்களை கஷ்டப்படுத்துவதற்காக அல்ல, உங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இந்த அரசு உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சர் ராஜ்மோகன் :

அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், தூய்மை பணியாளர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்த விதத்தை பாராட்டினார்.

“கடந்த 15 நாட்களாக பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல், ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறீர்கள். இது ஒரு போராட்டமாக மட்டும் தெரியவில்லை; மிகப்பெரிய மாநாடு போன்று உள்ளது” என்று கூறினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா :

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகையில், தூய்மை பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார்.

“தூய்மை பணியாளர்கள் இவ்வளவு நாட்களாக போராடி வருவது முதலமைச்சர் விஜய்க்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போராடும் மக்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு.

ஆட்சி அமைந்து 100 நாட்கள் மட்டுமே ஆகிறது. அரசுக்கு சிறிது கால அவகாசம் வழங்குங்கள். தூய்மை பணியாளர்களின் நலனை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று உறுதி அளித்தார்.

கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என அமைச்சர்கள் உறுதி :

தூய்மை பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர்கள் உறுதி அளித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் அடுத்தகட்ட முடிவு குறித்து ஆலோசித்து வருகின்றனர்.