லைஃப்ஸ்டைல்

It's One Life- வாழ்க்கை வாழ்வதற்கே.. முடிவல்ல; தொடக்கம்!

By Christon
15 Sep 2026, 07:01 PM
பணி ஓய்வு என்பது வாழ்க்கையின் முடிவல்ல; நமக்குப் பிடித்ததைச் செய்து நமக்காக வாழத் தொடங்கும் புதியதொரு ஆரம்பமே ஆகும்.
மாலா சங்கர்

"அப்பா... நாளைக்கு எத்தனை மணிக்கு அலாரம் வைக்கணும்?" மகள் கேட்டதும் அவர் சிரித்தார். "இனிமே அலாரம் எதுக்கும்மா?"

"ஆமால்ல... நீங்க ரிடையர் ஆயிட்டீங் கில்ல? அதை மறந்து வழக்கம்போலக் கேட்டுட்டேன்! ஸாரிப்பா!"
அடுத்த நாள் காலை... அலாரம் அடிக்க வில்லை. ஆனால், அவர் வழக்கம்போல ஆறு மணிக்கே எழுந்துவிட்டார்.

"இவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன பண்ணப் போறீங்க?" என்றாள் மனைவி. அவளுக்குப் பதில் சொல்லாமல் எழுந்து வாஷ் பேஸினுக்குச் சென்று, பல் தேய்த்து, முகம் கழுவிக் கொண்டவர், பல வருடங்களாக உபயோகப்படுத்தப்படாமல், அலமாரியில் மடித்து வைக்கப்பட்டிருந்த 'ஜாகிங்' உடையை எடுத்து அணிந்து கொண்டார்.

"இத்தனை நாளும் நேரம் இல்லையேன்னு சொல்லிக்கிட்டிருந்தேன். இப்போ நேரமே என்னைத் தேடி வந்திருக்கு,” என்று சொல்லிச் சிரித்தவர், அருகிலிருந்த பூங்காவுக்குச் சென்றார். முதலில் சில அடிகள் மட்டுமே நடந்தார்.

பிறகு, நடையின் வேகத்தைக் கூட்டினார். பின், மெதுவாக ஓடத் தொடங்கினார். பல வருடங்களுக்குப் பிறகு, அவரது மனமும் உடலும் ஒரே நேரத்தில் இலகுவாக இருப்பதை உணர்ந்தார். மதியம், மகனுக்கு ஒரு செய்தி அனுப்பினார்... “இன்னிலேர்ந்து ஒரு புதிய வேலை ஆரம்பிச்சுட்டேன்." மகன் பதறி, "என்ன வேலைப்பா?"என்று கேட்டான்.

"எனக்குப் பிடித்ததைச் செய்வது!" அன்று மாலை, மகன் வீடியோ கால் செய்து பேசினான். அப்பாவின் முகத்தில் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு புதிய உற்சாகத்தைப் பார்த்தான். ஓய்வு பெற்றது அவருடைய வேலை தான். அவருடைய வாழ்க்கை அல்ல. ஓய்வு என்பது முடிவல்ல; நமக்காக வாழத் தொடங்கும் முதல் நாள்!