சினிமா

காக்க காக்க காதல் மீண்டும் வைரல்...ரசிகர்களை கவர்ந்த சூர்யா - ஜோதிகா வீடியோ!

By Sumalekha
16 Sep 2026, 08:24 AM
“என்னில் இணைய உன்னை அடைய என்ன தவங்கள் செய்தேனோ” என்று 20 ஆண்டுகால திருமண நிறைவை கொண்டாடியுள்ள சூர்யா ஜோதிகாவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதி தங்களின் 20 ஆண்டுகால காதலைக் கொண்டாடும் விதமாக, திருமண உறுதிமொழி புதுப்பித்தல் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்களாக இருப்பவர்கள் சூர்யா - ஜோதிகா. 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள், சினிமாவைக் கடந்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரசிகர்கள் மத்தியில் முன்மாதிரி தம்பதியாக பார்க்கப்படுகின்றனர்.

இவர்கள் இருவரும் 1999-ஆம் ஆண்டு வெளியான  'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படத்தின் போது இருவரும் முதன்முதலில் சந்தித்தனர்.அதைத் தொடர்ந்து  'காக்க காக்க' திரைப்படப் படப்பிடிப்பின் போது இவர்களின் நட்பு காதலாக மாறியது. பின்பு  செப்டம்பர் 11, 2006 அன்று பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

திரையுலகில் பல நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவ்வப்போது வெளியாகும் கிசுகிசுக்கள், விவாகரத்து வதந்திகள் போன்றவை சூர்யா - ஜோதிகா தம்பதியை பெரிதாக பாதித்ததில்லை. தனிப்பட்ட வாழ்க்கையிலும் சூர்யா மிக நேர்த்தியானவர் என ஜோதிகா அடிக்கடி குறிப்பிட்டு வருவதும், அதேபோல், ஜோதிகா குறித்து சூர்யாவும் பெருமிதமாக பேசி வருவதும் இருவரும் வாழ்க்கையில் நல்ல புரிதலோடு சிறந்த ஜோடிகளாக திகழ்ந்து கொண்டு வருகின்றனர். நடிப்பைத் தாண்டி சமூகப் பணிகளிலும் இருவரும் ஈடுபட்டு வருவதால், ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளனர்.

இருவரும் கடைசியாக ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். திருமணத்துக்குப் பிறகு சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த ஜோதிகா, தற்போது தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சூர்யா - ஜோதிகா திருமண பந்தம் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அதனை கொண்டாடும் விதமாக ‘தொடர்ச்சி’ (The Sequel) என்ற பெயரில் திருமண உறுதிமொழி புதுப்பித்தல் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில்,
"எங்களின் 20 ஆண்டு கால காதலையும், சண்டைகளையும் கொண்டாடும் ஒரு திருமண உறுதிமொழி ஏற்பு. இது குறைகளற்ற திருமண வாழ்க்கையின் கொண்டாட்டம் அல்ல.

இது எங்களின் குறைகள், விட்டுக்கொடுத்தல், புரிதல்கள், தியாகங்கள் மற்றும் சுயநலமின்றி ஒருவரையொருவர் நேசித்ததன் கொண்டாட்டம். இது எங்களுக்கான கொண்டாட்டம். நாங்கள் ஒருவருக்காக ஒருவர் மாறியதன் கொண்டாட்டம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், "நிஜத்திற்கு வெகுதூரம் இருப்பதாக நினைத்த ஒரு கனவு, இப்போது என் வாழ்நாள் முழுவதும் நான் ரசித்து வாழும் நிஜமாக மாறியிருக்கிறது. என்ன ஒரு முரண்?" என ஜோதிகா தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தனது திருமண வாழ்க்கையின் புதிய உறுதிமொழிகளையும் ஜோதிகா பகிர்ந்துள்ளார்.

அதில்,
"நான் ஒரு மகிழ்ச்சியான நபராக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். ஏனெனில், வாழ்க்கையின் நேர்மறையான பக்கங்களை மட்டுமே பார்ப்பதற்கு நான் தேர்ந்தெடுக்கிறேன்.

நான் வாழ்க்கையைக் கொண்டாடுவேன் என்று உறுதியளிக்கிறேன். ஏனெனில், நாம் காதலிக்கும் ஒருவர் நம்மை நம்மைவிட அதிகமாக மதிக்கும்போது, இந்த வாழ்க்கையே ஒரு வரமாகிறது.

நான் எப்போதும் குறை கூறமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். இந்த உலகில் அனைத்துமே முழுமையானவை அல்ல. அந்த இடைவெளிகளை நாம் எவ்வாறு நிரப்புகிறோம் என்பதில்தான் வாழ்க்கையின் அழகு இருக்கிறது.

நான் என்றும் நன்றியுடன் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். ஒவ்வொரு நாளும் என்னைப் பாதுகாக்கும் மனிதனின் கரங்களில் விழிப்பதற்கும், என் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் காரணத்தையும் தந்த என் குழந்தைகளுக்காகவும் நன்றியுடன் இருப்பேன். நான் ஆரோக்கியமாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். ஏனெனில், நாம் சேர்க்கும் உண்மையான ஒரே சொத்து ஆரோக்கியம் மட்டுமே.

நான் ஒரு சிறந்த தாயாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நான் செய்யும் செயல்களால் மட்டுமல்ல, என் புன்னகையாலும் என் குழந்தைகளுக்கு சிறந்த முன்மாதிரியாக இருப்பேன்.

என்னுடைய சூர்யா, உனக்கு எப்போதும் குறைபாடுகள் கொண்ட அரைகுறையான மனைவியாகவே இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்! — உன்னோடு சண்டை போட்டு, பின் சமாதானமாகி, ஒவ்வொரு முறையும் உன்னோடு இன்னும் அதிக நெருக்கமாக இருக்கவே சண்டையிடும் மனைவியாக!

அனைத்திற்கும் மேலாக, நம் இருவரின் நட்பைப் போற்றிப் பாதுகாப்பேன். ஏனெனில், வாழ்க்கைத்துணையாகவும், மனசாட்சியாகவும், சிறந்த நண்பராகவும் இருக்கும் ஒருவர் கிடைப்பது மிகவும் அரிது. எனவே, நமது அடுத்த 20 ஆண்டுகளுக்கு வாழ்த்துகள் - குறைகளைக் கொண்ட நாம், நிறைவான புரிதலுடன்!" என ஜோதிகா பதிவிட்டுள்ளார்.

ஜோதிகாவின் இந்த நெகிழ்ச்சியான பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.