தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் 10வது சீசன் நாளை (செப்டம்பர் 6-ம்) பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இந்த முறை ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி திருவிழா கொண்டாட்டத்தை மையமாகக் கொண்ட புதிய தீமில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை 9 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் நிகழ்ச்சியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து 8 மற்றும் 9-வது சீசன்களை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். தற்போது தொடர்ந்து மூன்றாவது சீசனாக விஜய் சேதுபதியே தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.
திருவிழா தீமில் பிக்பாஸ் வீடு
10வது சீசன் என்பதால் இந்த முறை நிகழ்ச்சி வித்தியாசமான ‘திருவிழா’ தீமுடன் உருவாக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் தங்கவுள்ள பிக்பாஸ் வீடும் அதற்கேற்ற வகையில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 45 நாட்கள் கலைஞர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீட்டில், 10 ஜன்னல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், போட்டியாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கும் வகையில் 55 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் தங்கியிருந்து பல்வேறு டாஸ்க்குகள், சவால்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை எதிர்கொள்ள உள்ளனர்.
செப்டம்பர் 6-ல் தொடக்கம்
பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் பிரம்மாண்ட தொடக்க விழா நாளை (செப்டம்பர் 6) மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை, ஜியோஹாட்ஸ்டார் தளத்திலும் டிஜிட்டல் முறையில் பார்க்கலாம்.
புதிய போட்டியாளர்கள், எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் பரபரப்பான மோதல்கள் என இந்த சீசன் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் யார் போட்டியாளர்கள்?
பிக்பாஸ் சீசன் 10-ல் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போக உள்ளதாக சில பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் முதலாவதாக ரிவியூவர் பிரசாந்த் பெயர் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது போட்டியாளராக ஆஸ்மிதா, 3 வது போட்டியாளராக பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்த சின்னதிரை நடிகர் குமரன், 4 வது போட்டியாளராக மகாநதி சீரியலில் நடிக்கும் சின்னத்திரை நடிகை லட்சுமி பிரியா, 5 வது போட்டியாளராக தென்றல் வந்து என்னைத் தொடும் என்னும் சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகர் வினோத் பாபு மற்றும் 6 வது போட்டியாளராக அங்காடி தெரு மற்றும் பாகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் பிளாக் பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டி எப்படி நிகழும், என்ன மாதிரியான டாஸ்க் இடம்பெறும் என்று அனைவரும் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.